ADDED : நவ 18, 2024 10:37 PM

ஆனைமலை; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமை, வட்டார கல்வி அலுவலர்கள் சின்னப்பராஜ், செல்வமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மருத்துவக் குழுவினர், கை மற்றும் கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்குவாதம், கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து, மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் மருத்துவச் சான்றும் வழங்கப்பட்டது. அதன்படி, 20 பேருக்கு புதிய அடையாள அட்டை, 10 மாணவர்களுக்கு நலவாரியம் பதியப்பட்டது. மேலும், 30 பேருக்கு, மாற்றுத்திறன் அடையாள அட்டை வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

