/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர் நியமனத்தில் குளறுபடி ஆரம்பமே 'அமர்க்களம்!' 2ம் கட்ட பயிற்சிக்கு முன் தீர்வு காண கோரிக்கை
/
ஓட்டுச்சாவடி அலுவலர் நியமனத்தில் குளறுபடி ஆரம்பமே 'அமர்க்களம்!' 2ம் கட்ட பயிற்சிக்கு முன் தீர்வு காண கோரிக்கை
ஓட்டுச்சாவடி அலுவலர் நியமனத்தில் குளறுபடி ஆரம்பமே 'அமர்க்களம்!' 2ம் கட்ட பயிற்சிக்கு முன் தீர்வு காண கோரிக்கை
ஓட்டுச்சாவடி அலுவலர் நியமனத்தில் குளறுபடி ஆரம்பமே 'அமர்க்களம்!' 2ம் கட்ட பயிற்சிக்கு முன் தீர்வு காண கோரிக்கை
ADDED : ஏப் 01, 2024 11:44 PM
பொள்ளாச்சி:லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் நிலவும் குளறுபடிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தற்போது, 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.வரும், 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.
ஓட்டுச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை நியமித்தல் உள்ளிட்ட ஆயத்தப்பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபடுவோருக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
முதற்கட்ட பயிற்சி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சியும், தபால் ஓட்டுப்பதிவும் மேற்கொள்வதற்கான பணிகளில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குளறுபடிகள் காரணமாக ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
ஓட்டுச்சாவடிகளில் தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், மூன்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களாக அனுபவம் வாய்ந்த வட்டார கல்வி அலுவலர்கள், நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
அதை தொடர்ந்து, பெயர் படித்தல், மை வைத்தல், பேலட் செட் செய்வதற்கு என ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் ஒன்று, இரண்டு, மூன்றாகவும், அனுபவம் குறைந்தவர்களை, தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமித்து முதற்கட்ட பயிற்சிக்கு வந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், 'ரேண்டமாக' போட்டோம்; இது, 'சிஸ்டத்தில்' இருந்து வருவது, நாங்கள் என்ன செய்வது போன்ற காரணங்களை மட்டும் கூறுகின்றனர்.
இதனால் வீண் குழப்பங்கள் தான் ஏற்படும். அனுபவம் வாய்ந்தவர்களை தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கும் போது, அவர்கள் அந்த ஓட்டுச்சாவடி அனைத்து பணிகளையும் கவனித்து தேர்தலை நடத்த முடியும். தற்போது, அனுபவம் குறைந்தவர்களை நியமிப்பதால் வீண் குழப்பம் ஏற்படும்.
அதிகாரிகள் இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்கவும், பணிகளை முறையாக பிரித்து கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

