ADDED : டிச 12, 2024 11:22 PM
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 2010, டிச., 12ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மகா கும்பாபிேஷகம் நடந்தது.
கும்பாபிேஷக விழாவையொட்டி, மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசிக்க காத்திருந்தனர்.
ராஜகோபுர விமான கலசம், மூலஸ்தான கோபுர விமான கலசத்துக்கு புனித நீர் தெளிக்கப்பட்டதை கண்டு பரவசமடைந்த பக்தர்கள், 'மாசாணி தாயே...' என கோஷமிட்டு, வணங்கினர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், இரண்டாம் ஸ்தானீகம் ராஜா பட்டர் தலைமையில், சிவாச்சாரியார்கள், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, தீபாராதனை காண்பித்தனர்.
கோபுர தரிசனம் காண காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, 'ட்ரோன்' வாயிலாக, புனித நீர், தெளிக்கப்பட்டது.
வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., பக்தர்கள் நிற்க தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, கந்தசாமி, கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர்கள், விமான கோபுரத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை மூலஸ்தான கோபுரத்துக்கு வருமாறு அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்று, எம்.எல்.ஏ.,க்கள் மேலே சென்றனர்.
கோவில் சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவில் கோபுரங்கள், கோவில் உட்புறங்கள் அனைத்தும் பூக்களால் அலங்கரிப்பட்டு இருந்தன.
வர்ணணையாளர் மங்கையர்கரசி, கும்பாபிேஷக வர்ணணை செய்தார். பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், அம்மன் பாடலை பாடியதும், பக்தர்கள் கைதட்டி பரவசப்படுத்தினர்.
போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் நிறுத்தப்பகுதியை தாண்டிச் செல்ல யாரையும் போலீசார் அனுமதிக்காததால், கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.
கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கோவில் அறுங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து, தங்கமணி, செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.

