ADDED : நவ 03, 2024 10:39 PM
பொள்ளாச்சி; ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு, 35 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு டன் இளநீரின் விலை, 14,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வாடகைக்கு லாரிகள் கிடைக்காத காரணத்தால், இளநீர் அறுவடை கடந்த நான்கு நாட்களாக மந்தமாக உள்ளது.
இன்று முதல் இளநீர் அறுவடை சுறுசுறுப்படையும். வட மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இளநீருக்கு தேவை அதிகரித்துள்ளது.
செவ்விளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. பல தோப்புகளில் 'ஈரியோபைட்' சிலந்திப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக உள்ளதால், சொறி அதிகமாக காணப்படுகிறது.
உரிய கட்டுப்பாடு முறைகளை பின்பற்றி, இளநீரின் தரத்தை உயர்த்தாவிட்டால் விலையில் கடும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.