ADDED : ஆக 04, 2025 07:38 PM

வால்பாறை; சோலையாறு அணை ஐந்தாவது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில், கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப்பருவ மழை துவங்கியது. கடந்த ஜூன் மாதம் மழை தீவிரமடைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை 26ல் நிரம்பியது.
இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்த நிலையில், மீண்டும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் சோலையாறு அணை ஐந்தாவது முறையாக நிரம்பியது. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீர்மட்டம் உயர்வு வால்பாறையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.74 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,942 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,719 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.
இதே போல், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 118.60 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 71.86 அடியாகவும் உயர்ந்தது.
மேல்நீராறில் 52 மி.மீ., நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,): சோலையாறு - 50, பரம்பிக்குளம் - 68, வால்பாறை - 41, மேல்நீராறு - 52, கீழ்நீராறு - 24, காடம்பாறை - 2, மேல்ஆழியாறு - 2, சர்க்கார்பதி-10, மணக்கடவு -4, துணக்கடவு -28, பெருவாரிப்பள்ளம் -30, நவமலை - 13, பொள்ளாச்சி-3.