/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழக்கு வாகனங்கள் மண்ணோடு மண்ணாகும் அவலம்
/
வழக்கு வாகனங்கள் மண்ணோடு மண்ணாகும் அவலம்
ADDED : மே 24, 2025 01:04 AM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், வாகனங்கள் மண்ணோடு மண்ணாகும் அவலம் நீடிக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்கில் சிக்கிய வாகனங்களை ஒரே இடத்தில் ஒட்டு மொத்தமாக நிறுத்தி வைப்பதால், அது யாருக்கும் பயன் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், விஷ ஜந்துக்கள், நடமாடும் பகுதியாக மாறிவிடுகிறது. இது போன்ற வாகனங்களை உடனுக்குடன் ஏலத்தில் விட்டு அரசுக்கும், வருவாய் ஏற்படுத்தி தர வேண்டும். வாகனங்கள் நீண்ட நாட்கள் நிறுத்தப்படுவதால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு துறை அதிகாரிகளும், இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தி பிடிபட்ட வாகனங்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்குகளை விரைந்து முடிக்கவும், அபராதம் விதித்து மற்றும் பொதுஏலத்தில் விட்டு, உடனுக்குடன் இவற்றை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் நிலையங்களின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தாலும், அவற்றின் உதிரி பாகங்கள் திருட்டுப் போகின்றன. கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் உதவியோடு, வாகன உரிமையாளர்களை
கண்டறிந்து, உடனடியாக ஒப்படைக்க வேண்டும் அல்லது பொது இடத்தில் ஏலம் விட வேண்டும்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' பொது இடங்களில் பழைய வாகனங்களை குவித்து வைப்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பேட்டரியில் திராவக கசிவு, டயரில் காற்று இறங்கி, மண்ணில் புதைவால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் மீது உடனுக்குடன் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,' குற்ற செயல்களுக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், வழக்குகள் நீதிமன்றங்களில் முடிந்த பின்பு தான் அதை விடுவிக்க முடியும். வழக்கு விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டி இருப்பதால், வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அல்லது கோர்ட் வளாகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதே போல மண் கடத்தல், அரிசி கடத்தல் உள்ளிட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடியும் வரை போலீசாரே வைத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது' என்றனர்.