கிணத்துக்கடவு வட்டார கல்குவாரிகளில்... விதிமீறல் தொடருது! கடிவாளம் போட அமைச்சரிடம் கோரிக்கை
கிணத்துக்கடவு வட்டார கல்குவாரிகளில்... விதிமீறல் தொடருது! கடிவாளம் போட அமைச்சரிடம் கோரிக்கை
UPDATED : ஜூலை 08, 2026 04:46 PM
ADDED : ஜூலை 08, 2026 04:41 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள கல்குவாரிகளில், கடந்த ஆட்சியில் நடந்த ஆளுங்கட்சியினர் 'கப்பம்' வசூல், டிரிப் சீட் முறைகேடு மட்டும் குறைந்துள்ளது. ஆனால், விதிமீறல்கள் தொடர்வது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, அமைச்சரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 40க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதில், பெரும்பாலான கல்குவாரிகளில் இன்றளவும் விதிமீறல் நடக்கிறது.
கடந்த ஆட்சியில், நேரம் பாராமல் இரவு பகலாக பாறைகளுக்கு வெடி வைப்பது, கிராமப்புற ரோடுகளில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக டிப்பர் லாரிகளில் கற்களை ஓவர் லோடு ஏற்றி செல்வது, குவாரிக்கான விதிமுறையை பின்பற்றாமல் செயல்பட்டது.
மேலும், ஒரு யூனிட்டுக்கு, 400 முதல் 500 வரை ஆளுங்கட்சி ஆட்கள் 'கப்பம்' வசூல் செய்தனர். இதுமட்டுமின்றி, 'டிரிப் சீட்' முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வகையில் ஊழல் நடந்தது.
இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவதும், கிராமப்புற ரோடு சேதமடைதல், வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து அபாயம், பாறைகளுக்கு வெடிக்கும் போது கற்கள் பறந்து வீட்டின் கூரையில் விழுவது போன்றவையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஆளுங்கட்சி சார்பில் யூனிட் அடிப்படையில் 'கப்பம்' வசூலிப்பதும், பர்மிட் வழங்க இல்லீகலாக பணம் வசூலிப்பதும் குறைந்துள்ளது. ஆனாலும், குவாரிகளில் விதிமீறல்கள் தொடர் நடக்கிறது.
மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, கிணத்துக்கடவு விவசாயிகள் சார்பில் கனிமவள கற்கள் கேரளாவுக்கு கடத்தியது தொடர்பாக ஆதாரங்களுடன், இயற்கை வளங்கள், கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரபுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக கல்குவாரி குறித்து பல முறை, பல அதிகாரிகளுக்கு வாய்மொழியாகவும், மனு வாயிலாகவும் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது உள்ள அரசிடமும், அமைச்சரிடமும் மனு வழங்கியுள்ளோம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு பகுதியில் கல்குவாரி விதிமுறைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை வேண்டும். இல்லாவிட்டால், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, கூறினர்.
