/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாயில் கழிவு போக வழியில்லை! கழிப்பறையில் கால் வைக்க முடியலை
/
கால்வாயில் கழிவு போக வழியில்லை! கழிப்பறையில் கால் வைக்க முடியலை
கால்வாயில் கழிவு போக வழியில்லை! கழிப்பறையில் கால் வைக்க முடியலை
கால்வாயில் கழிவு போக வழியில்லை! கழிப்பறையில் கால் வைக்க முடியலை
UPDATED : பிப் 02, 2026 05:56 AM
ADDED : பிப் 02, 2026 05:52 AM

மாநகராட்சி மேற்கு மண் டலம் 42வது வார்டானது கோவில் மேடு, வேலாண்டிபாளையம் ஒரு பகுதி, ஜீவானந்தம் வீதி, திலகர் வீதி, சாஸ்திரி வீதி, சின்னக்கோணார் வீதி, கருப்பகோனார் வீதி உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் பள்ளிகள் அதிகம் உள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வடக்கு பகுதியும் இந்த வார்டில்தான் அமைந்துள்ளது. எனவே, விளை நிலங்களும், கணுவாயில் இருந்து வரும் நீர்வழித்தடம் முத்தண்ணன் குளத்தை இந்த வார்டை கடந்து அடையும் வகையிலும் நீளவாக்கில் செல்கிறது.
இங்கு பிரதான பிரச்னையாக நீர்வழித்தடத்தில் குப்பை, மெத்தை, பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ளன. புதர் மண்டியும் கிடப்பதால் துர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புலம்பித்தீர்க்கின்றனர். இக்கால்வாயை துார்வார வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளில் ஒன்று.
இங்குள்ள பள்ளிகளின் சுவர்களில் அரசியல் போஸ்டர்கள், விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
படிக்கும் மாணவர்களிடம் இளம் வயதிலேயே அரசியல், தவறான வழிநடத்தல்களுக்கு வழிவகுப்பதாக அப்பகுதி மக்கள் முகம் சுழிக்கின்றனர்.
மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் சிறுநீர் கழிப்பது, மது அருந்துவது போன்ற சம்பவங்களும் நடப்பதாக அதிருப்தி நிலவுகிறது.
குரல் கொடுக்கிறேன்!
வார்டு கவுன்சிலர் பிரவீன்ராஜிடம் (தி.மு.க.) கேட்டபோது, ''வார்டு பிரச்னைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். கண்களுக்கு தெரியாத பிரச்னைகளும் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என்றார்.
நேரில் ஆய்வு
மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர் துரைமுருகனை தொடர்புகொண்டு வார்டு பிரச்னைகளை விவரித்தபோது, ''கோவில் மேடு பகுதியில் நேரில் ஆய்வு செய்து கழிவறையை சுத்தம் செய்யவும், நீர்வழித்தடம் துார்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
'சிசிடிவி' தேவை!
கோவில்மேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு திலகர் வீதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்குள்ள நுாலகம் எதிரே முதல் பள்ளி செல்லும் வரை தெரு விளக்கு இல்லை. பள்ளி குழந்தைகள் இப்பாதையை கடக்கும் நிலையில் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் பயமின்றி நடமாட முடியும்.
-மாரி, இரு சக்கர மெக்கானிக்.
மோசமான 'டாய்லெட்
' எம்.ஜி.ஆர். வீதி, திலகர் வீதி, சாஸ்திரி வீதி, நல்லம்மாள் வீதியில் மட்டும் 1000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கெல்லாம் சேர்த்து மாரியம்மன் கோவில் எதிரே ஆண்கள், பெண்களுக்கென்று தனி கழிப்பிடம் உள்ளது. மொத்தம் ஏழு அறைகள் மட்டுமே இருக்கிறது. ஐந்து அறைகளை பயன்படுத்தவே முடியாது. மோசமான நிலையில் கதவுகூட இல்லை. வேறு வழியின்றி மக்கள் பயன்படுத்துகின்றனர். இருப்பதை புதுப்பிப்பதுடன், கூடுதலாக கட்டித்தர வேண்டும். 10 ஆண்டுகளாக நான்தான் சுத்தம் செய்கிறேன். எனக்கான சம்பளம் வேறு ஒருவருக்கு செல்கிறது. கழிப்பறையை பயன்படுத்துவோர் தரும் பணத்தை வைத்து காலத்தை கழிக்கிறேன்.
-சண்முகம் துாய்மை பணியாளர்.
வேகத்தடை தெரியாது
கோவில்மேடு மாநகராட்சி பள்ளி எதிரே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கு வண்ணம் பூசவில்லை. இரவில் மட்டுமின்றி பகலிலும் வாகனத்தில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாறுகின்றனர். அதேபோல், கோவில் மேடு சந்திப்பில் இருந்து ஜீவானந்தம் வீதி வழியாக செல்லும்போது ரோட்டையொட்டி கால்வாய் செல்கிறது. குறுகிய ரோட்டில் பக்கவாட்டு சுவர் இல்லாததால் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, ரோட்டையொட்டி தடுப்பு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
-விஜயராஜ் சுயதொழில்.
துார்வார வேண்டும்
திலகர் வீதி, கோவில் மேடு வழியாக செல்லும் நீர்வழித்தடத்தில் குப்பையை குவிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். புதர் மண்டியிருப்பதால் கொசு தொல்லையும் அதிகரிக்கிறது. அருகே வசிப்பவர்களும் பொறுப்பை உணர்ந்து குப்பைகழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். ரோட்டோரம் வளர்ந்திருக்கும் செடி, கொடிகளை துார்வாருவது அவசியம்.
-ஜெயந்தி இல்லத்தரசி.

