காலம் இருக்குது களமாட...!: கல்விக்கு தடையில்லை வயது:ஆர்வம் காட்டும் முதியோர்
காலம் இருக்குது களமாட...!: கல்விக்கு தடையில்லை வயது:ஆர்வம் காட்டும் முதியோர்
UPDATED : செப் 18, 2026 04:19 PM
ADDED : செப் 18, 2026 04:02 PM
காரமடை: மத்திய அரசின், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் காரமடை கல்வி வட்டாரத்தில், 1,150 பேருக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. முதியோர் கற்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாடு முழுதும் கல்வி கற்காத, 15 வயதை கடந்தவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு கல்வியை பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் எனும் திட்டத்தை, 2022-ல் அறிமுகம் செய்தது. திட்டத்தின் கீழ், 2027-ம் ஆண்டுக்குள், 5 கோடி பேருக்கு கல்வி கற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம், பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்ற தன்னார்வலர்களின் பங்களிப்போடு செயல்படுகிறது.
எழுதப்படிக்க கற்றுக்கொடுப்பதுடன், வாழ்வியல் திறன்களும் கற்பிக்கப்படுகின்றன. வங்கி பரிவர்த்தனைகள், தபால் நிலையங்களின் செயல்பாடுகள், சேமிப்பு போன்ற நிதிசார் அறிவுத்திறன், மொபைல் போன் மற்றும் கணினிப் பயன்பாடு போன்ற டிஜிட்டல் அறிவுத்திறனும் கற்பிக்கப்படுகின்றன. காரமடை கல்வி வட்டாரத்தில், வட்டார வள மையம் சார்பில், திட்டத்தின் கீழ் நடப்பாண்டு தற்போது, 1,150 பேர் கற்போராக கண்டறியப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு, 62 மையங்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
காரமடை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களின் விண்ணப்பங்களில், யார் கையொப்பமிடாமல் கைரேகை வைக்கிறார்களோ, அவர்களை அடையாளம் கண்டும், வீடுவீடாக சென்ற ஆசிரியர்களின் கணக்கெடுப்பின் படியும், 1,150 பேருக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தன்னார்வலர்களுக்கு சமீபத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கற்போரில், 35 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், 60 வயதுக்கு மேல் ஆனவர்கள். பெறும் எழுத்தறிவால், வயதானவர்கள் தங்களால் கையெழுத்திட முடிகிறது. பஸ்சில் உள்ள எழுத்துகளை படித்து, எந்த ஊருக்கு பஸ் செல்கிறது என அவர்களால் கண்டறிய முடிகிறது. வயது வித்தியாசம் பாராமல் ஆர்வமாக படிக்கின்றனர்.
கடந்த காலங்களில் இத்திட்டத்தால் பயன்பெற்றவர்கள், தற்போது யார் துணையும் இன்றி வங்கிக்கு செல்ல முடிகிறது. பஸ்களில் உள்ள ஊர் பெயர்களை அவர்களே படித்து தெரிந்துக் கொள்ளவதால், வெளியூருக்கு பஸ்சில் தனியாக செல்ல முடிகிறது. இவர்களுக்கு வகுப்பு எடுக்கும் தன்னார்வலர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. கற்போருக்கு, வரும் நவம்பர் மாதம் தேர்வு நடக்க உள்ளது. தேர்வெழுத உள்ளோர், இதற்காக ஆர்வத்துடன் உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.-------
