/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹெல்மெட் அணிந்தனர்... பெட்ரோல் பரிசு பெற்றனர்!
/
ஹெல்மெட் அணிந்தனர்... பெட்ரோல் பரிசு பெற்றனர்!
ADDED : ஜன 23, 2025 12:06 AM

கோவை; இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கினர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி, மாநகர போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதையும், போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் ஹெல்மெட் அணிந்து வந்தால், அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்க, ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை, அண்ணா சிலை சிக்னலில் போலீசார் நின்றனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனங்களில், இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து வந்த 50 வாகன ஓட்டிகளுக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் கூப்பன் பரிசாக வழங்கினர். மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் இருவரும், ஹெல்மெட் அணிந்து செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.