/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது
/
புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது
ADDED : ஜன 30, 2026 05:21 AM

மேட்டுப்பாளையம்: காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில், புலிகள் கணக்கெடுக்கும் பணி, நேற்று முதல் துவங்கியுள்ளது. இப்பணி எழு நாட்கள் நடைபெற உள்ளது.
சேகரிக்கப்படும் மாதிரிகளை கணக்கில் கொண்டு புலிகள் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள முடியும். காரமடையில், வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலும், மேட்டுப்பாளையத்தில் வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலும் துவங்கியது. இதில் தன்னார்வலர்கள், வனத்துறையினர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். காரமடையில் 6 குழுக்களாக பிரிந்து, மானார் பிரிவு, வீரக்கல், குண்டூர், அத்திகடவு, கொரவன்கண்டி, பில்லூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையத்தில் ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர், உல்லிகல் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் 6 குழுக்களாக பிரிந்து பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அடர்ந்த வனப்பகுதியில் தினமும் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
காலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்நடையாக நடந்து சென்று புலிகள் நடமாட்டம், அதன் கால் தடங்கள், வந்து சென்ற பிற அடையாளங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்படும். அடுத்ததாக மதியம் 5 கி.மீ., தொலைவிற்கு சென்று நடமாட்டம் குறித்து ஆராயப்படும். மீண்டும் 2 கி.மீ., தூரம் நீர்நிலைகள் பகுதிகளுக்கு சென்று ஆராயப்படும்.
இந்த கணக்கெடுப்பில் புலிகள் மட்டும் அல்ல, புலிகள் வேட்டையாட தேவையான அளவு மான்கள், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளனவா எனவும் கணக்கெடுப்போம். யானைகள் எண்ணிக்கையும் கணக்கெடுக்கிறோம்.
அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் வந்து சென்ற தடயத்தை வைத்து, அதாவது யானைகளின் சாணம், அதன் கால் தடங்கள் ஆகியவற்றை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, என்றனர்.-------

