/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தாய் மொழியை நன்கு கற்று தவறில்லாமல் எழுத வேண்டும்'
/
'தாய் மொழியை நன்கு கற்று தவறில்லாமல் எழுத வேண்டும்'
'தாய் மொழியை நன்கு கற்று தவறில்லாமல் எழுத வேண்டும்'
'தாய் மொழியை நன்கு கற்று தவறில்லாமல் எழுத வேண்டும்'
ADDED : பிப் 07, 2025 10:14 PM

மேட்டுப்பாளையம்; ''தாய் மொழியை நன்கு கற்று, தவறில்லாமல் எழுதி பழக வேண்டும்,'' என, கல்லூரி முதல்வர் ஸ்ரீகானபிரியா பேசினார்.
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர் தமிழ் மன்றம் மற்றும் தற்கால இலக்கிய களம் துவக்க விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீகானபிரியா தலைமை வகித்து பேசியதாவது:
தாய் மொழியை தவறில்லாமல் படிக்கவும், எழுதவும் பழக வேண்டும். கலாசாரம் நிறைந்த தமிழ் மொழியை முழுமையாக கற்க வேண்டும். ஆனால் இன்றைய சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு, தமிழ் சரியாக எழுதத் தெரியாது என, பெருமையாக கூறுகின்றனர். தமிழ் மொழியை முழுமையாக கற்கும் போது தான், பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். பிற மொழி வார்த்தைகளையும் ஒப்பிட்டு பார்க்க முடியும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
தினமும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் அலைபேசியில் பேச்சு நேரத்தை குறைத்துக் கொண்டு, வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். நிறைய படிக்கும் போதுதான், புதிய, புதிய வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடியும், அறிவும் வளரும்.
இவ்வாறு ஸ்ரீகானபிரியா பேசினார்.
விழாவில், வக்கீல்கள் ஆனந்தன், கரீம், எழுத்தாளர் வேலாயுதம் ஆகியோர் பேசினர். கல்லுாரி தமிழ் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழ்த்துறை விரிவுரையாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.