/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதியில் உள்ள நீராதாரங்களில் தாகம் தீர்க்க...நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர்
/
வனப்பகுதியில் உள்ள நீராதாரங்களில் தாகம் தீர்க்க...நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர்
வனப்பகுதியில் உள்ள நீராதாரங்களில் தாகம் தீர்க்க...நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர்
வனப்பகுதியில் உள்ள நீராதாரங்களில் தாகம் தீர்க்க...நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர்
ADDED : ஏப் 08, 2024 11:49 PM

பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட செயற்கை நீராதாரங்களில், வனவிலங்குகள் தாகம் தீர்க்க வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், 1,479 ச.கி.மீ., பரப்பில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய எட்டு வனச்சரகங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த வனப்பகுதியில் அதிகப்படியான யானை, காட்டெருமை், மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளும், பல்வேறு வகையான பறவையினங்களும் காணப்படுகின்றன.
இவைகள், வனப்பகுதியில் உள்ள குட்டைகள், ஓடை, சிற்றோடை உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. ஆனால், கோடை வறட்சியின் போது தண்ணீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிக்கின்றன. நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் அலைமோதும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மழையின்றி, தற்போது, பகலில், 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி வருவதால், வனத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மரங்கள், செடி மற்றும் கொடிகள் காய்ந்து கிடக்கின்றன.
தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள், பண்ணைக் குட்டைகள், ஆறுகள் போன்ற நீராதாரமிக்க பகுதிகளும் வறண்டு காணப்படுகின்றன. வனப்பகுதியில் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுடன் கூடிய தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால், வனத்தினுள் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதாகவும், மழையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் வனத்துறையினர் கூறுகின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது: ஒவ்வொரு வனவிலங்கும், உணவு மற்றும் தண்ணீருக்காக குறிப்பிட்ட பரப்பில் சுற்றித் திரியும். அவற்றில் யானை மட்டுமே அதிகப்படியாக, 500 சதுர கிலோமீட்டர் பரப்பு வரை இடம் பெயர்கிறது. ஆனால், பிற வனவிலங்குகள் அவற்றின் வாழ்விடத்தைச் சுற்றியே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இதனை கருத்தில் கொண்டு, வனச்சரக பகுதிகளில் உள்ள செயற்கை நீராதாரமிக்க தண்ணீர் தொட்டி, பண்ணைக் குட்டைகள், கசிவுநீர் குட்டைகளில் டிராக்டர்கள் வாயிலாகவும் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது.
தொட்டிகளில் தண்ணீரின் இருப்பு குறித்து அவ்வப்போது கண்காணிக்கப்படும். அதற்கேற்ப மீண்டும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். புலிகள் காப்பகம் முழுவதிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

