ADDED : செப் 18, 2026 04:11 PM
வால்பாறை: வால்பாறையில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி நாளை (20ம்தேதி) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில், 35ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவில்களில், கடந்த 14ம் தேதி 70 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், ஆறு நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின், நாளை (20ம் தேதி) சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, வால்பாறையிலிருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், முடீஸ், சின்கோனா வழியாக செல்லும் பஸ்கள் நல்லகாத்து பாலம் அருகில் இருந்தும், அக்காமலை, கருமலை, வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பஸ்கள் நடுமலை பழைய பேக்டரியில் இருந்தும் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர்.
