விஷன் ஆனைமலை கல்வி இலக்கு திட்ட வரைவு அறிக்கை வெளியீடு
விஷன் ஆனைமலை கல்வி இலக்கு திட்ட வரைவு அறிக்கை வெளியீடு
ADDED : ஜூன் 04, 2026 04:13 AM

ஆனைமலை: ஆனைமலை வட்டார கல்வி அலுவலக வளாகத்தில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆசிரியர்களுக்கான கருத்தரங்க கூடம் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் கூடிய என்.எம்.எஸ்., பயிற்சி அரங்கம் திறப்பு விழா நடந்தது. விஷன் ஆனைமலை, 2026-29 கல்வி இலக்கு திட்டமும் துவங்கப்பட்டது.
கன்னியம்மன் கோவில் காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தி, பெற்றோரின் நினைவாக வழங்கிய பங்களிப்பு மற்றும் திருப்பூர் டி.டி.இ.சி. சங்க தலைவரும், எம்.ஏ.எம். இன்ஜினியர்ஸ் நிறுவனருமானமோகன்ராஜ் ஆகியோரின் தொழில்நுட்ப கட்டமைப்பு உதவியுடன் அரங்குகள் புதுப்பிக்கப்பட்டன.
முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் ஆர்.ஓ., குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஆதன் அரங்கம், ஆதிரை பயிலரங்கம் அர்ப்பணிக்கப்பட்டது.
ஆனைமலை வட்டார கல்வி அலுவலர்கள் சார்மிளா, ஷாலினி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஊரகவளர்ச்சித்துறை (தணிக்கை) உதவி இயக்குனர் பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிக், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்து அரங்குகளை திறந்து வைத்தனர்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
வரும் மூன்று ஆண்டுகளுக்கான கல்வி மற்றும் கற்றல் விளைவுகளை மேம்படுத்தும், விஷன் ஆனைமலை, 2026-29 திட்ட வரைவு அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. இந்த கூட்டு முயற்சிக்கு அரசு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
