125 நாள் வேலை திட்டத்தில் கூலி உயர்வு! தொழிலாளர்கள் மகிழ்ச்சி
125 நாள் வேலை திட்டத்தில் கூலி உயர்வு! தொழிலாளர்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 04, 2026 06:46 AM

பெ.நா.பாளையம்: கிராமப்புற மக்களுக்கான ஆண்டுக்கு, 125 நாட்கள் கூலியுடன் வேலை வாய்ப்பு வழங்கும், 'விபி ஜி ராம் ஜி' திட்டத்தில் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மத்திய அரசின் புதிய ஊரக வேலை உறுதி திட்டமாகும்.நடப்பு ஆண்டு ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுவரை செயல்பட்டு வந்த, 100 நாள் திட்டம் மற்றும் தற்போதைய, 125 நாள் திட்டத்துக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கான கூலியின் பெரும் பகுதியை மத்திய அரசு ஏற்றது. வருகை பதிவு வழக்கமான பதிவு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் கிராமப்புற அடிப்படையில் செய்யப்பட்டன.
125 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு, 125 நாட்கள் தொழிலாளர்களுக்கு வேலைகள் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் பங்கீடு இதில், 60க்கு, 40 சதவீதம் என்ற அளவில் இருக்கும். பயோமெட்ரிக் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, குளம், ஏரி, குட்டை தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்குதல், தடுப்பணை அமைத்தல், கால்வாய் சீரமைத்தல், கிராம சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்,கிராம சபை ஒப்புதல் பெற்ற வளர்ச்சி திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் பிற திட்டங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே விதமான கூலி அளிக்கப்படுகிறது.
இதுவரை ஒரு நபருக்கு, நாள் ஒன்றுக்கு, 336 ரூபாய் என இருந்தது, தற்போது, 345 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கூலி உயர்வு ஜூலை, 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற உரிய வேலை வழங்கி, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சலுகைகளையும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஊரக வளர்ச்சி துறை இயக்ககம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு,பணித்தளங்களில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்குதல், தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரித்தல், பணித்தள பொறுப்பாளர்களுக்கு உதவியாளராக அமர்த்துதல், கரைகளை சமப்படுத்துதல், கரைகளின் சரிவு பகுதிகளை சீர் செய்தல் உள்ளிட்ட சிறப்பு பணிகளை வழங்க வேண்டும்.
மேலும், உடல் உழைப்பினை மேற்கொள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, முட்புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், நீர் பாய்ச்சுதல், மண் மற்றும் கல் வரப்பு அமைத்தல், அகழி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
மண் வேலை பணியில், முன் அளவீடு செய்து தரப்பட்ட பணியில், 50 சதவீத பணிகளை முடித்தால், அவர்களுக்கு, முழு ஊதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறன் தொழிலாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில், மாதந்தோறும், இரண்டாவது செவ்வாய்கிழமை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தலைமையில் குறைகேட்பு முகாம் நடத்த வேண்டும். இரு மாதங்களுக்கு ஒரு முறை, கூடுதல் கலெக்டர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவற்றை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கண்காணிக்க வேண்டும், என, ஊரக வளர்ச்சி துறை இயக்கக கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
