தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முறையாக டெண்டர் விடக்கோரி வார்டு உறுப்பினர்கள் போராட்டம்

முறையாக டெண்டர் விடக்கோரி வார்டு உறுப்பினர்கள் போராட்டம்

முறையாக டெண்டர் விடக்கோரி வார்டு உறுப்பினர்கள் போராட்டம்


ADDED : மார் 05, 2024 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 09:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்;பணிகள் செய்ய, முறையாக டெண்டர் விட கோரி, தி.மு.க., அ.தி.மு.க., வை சேர்ந்த நான்கு வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. நேற்று காலை, 11:00 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தில் சாதாரண மன்றக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் நித்யா நந்தகுமார் (அ.தி.மு.க.,) தலைமை வகித்தார். துணைத் தலைவர் தங்கராஜ் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், தி.மு.க.,வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் முத்துக்குமார், மகாலட்சுமி, அபிதா ராஜா முகமது, அ.தி.மு.க., வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது ஆகிய நான்கு பேர் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

ஊராட்சியில், 4.84 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுள்ள, ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் கட்டிய, மேல்நிலைத் தொட்டிகளுக்கு இன்னும் தண்ணீர் பம்பிங் செய்யவில்லை. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் செய்ய, 11 பணிகளுக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டது. 14 வேலைகளுக்கு, மறைமுகமாக டெண்டர் விடப்பட்டது. பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.

சுப்பு நகருக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க வேண்டும். மறைமுகமாக விட்ட டெண்டர்களை ரத்து செய்து, புதிதாக டெண்டர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

தலைவர் நித்யா நந்தகுமார், துணைத்தலைவர் தங்கராஜ் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் மாலை, 3:30 மணிக்கு, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) மகேஸ்வரி, தேக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களுடன், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தலைவர், துணைத் தலைவரிடம், போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்கள் வார்டுகளில், பணிகள் நடைபெறாமல் இருந்தால், உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் பணிகள் செய்து கொடுக்கும்படி அறிவுரை வழங்கினார்.

பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வைத்தார். அதற்கு ஒப்புக்கொண்ட வார்டு உறுப்பினர்கள் நான்கு பேரும், போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் நித்யா நந்தகுமார் கூறுகையில், ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில், புதிதாக, 22 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கடந்த மாதம் இறுதியாக, 4 தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டன. அந்த தொட்டிகளுக்கு குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து பணிகளும் முடித்த, ஒவ்வொரு தொட்டிக்கும் தண்ணீர் பம்பிங் செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

நான்கு தொட்டிகளுக்கு குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பணிகள் முடிந்த பின், சீரான குடிநீர் வழங்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஊராட்சியில் பணிகள் செய்ய, முறையான பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் டெண்டர் விடப்பட்டது. மறைமுகமான டெண்டர் ஏதும் நடைபெறவில்லை. கவுன்சிலர்கள் தவறான தகவல்களை தருகின்றனர்.

இவ்வாறு தலைவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us