/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த வழி
/
வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த வழி
ADDED : பிப் 21, 2026 05:59 AM

சூலுார்: தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மஞ்சள் ஒட்டும் பொறிகள், ஒட்டுண்ணிகளை தோட்டக்கலைத் துறை வழங்குகிறது.
தென்னையில், 'ரூகோஸ்' சுருள் வெள்ளை ஈக்கள் பெருகி வருகின்றன. பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகளின் உட்பகுதியில் சுருள், சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும்.
வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பகுதியில், கூட்டமாக சேர்ந்து, சாறு உறிஞ்சி, மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும். ஈக்கள் சுரக்கும் திரவம் கீழ் உள்ள இலைகளின் மேல் பகுதியில் விழுந்து கரும் பூஞ்சாணம் வளரும். இலைகள் கருப்பு நிறமாக மாறி, ஒளிச்சேர்க்கை தடுக்கப்பட்டு, மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும்.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மஞ்சள் ஒட்டும் பொறிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகின்றன. ஆமணக்கு எண்ணெய் தடவிய, ஐந்து அடி நீளம், 1.5 அடி அகலம் கொண்ட மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள், மரங்களுக்கு இடையில் தொங்க விடலாம் அல்லது தண்டு பகுதியில் ஆறு அடி உயரத்தில் சுற்றியும் பயன்படுத்தலாம்.
ஒரு எக்டேருக்கு, 10 எண்கள் மற்றும் 1,000 ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகின்றன. சுல்தான்பேட்டை வட்டாரத்தில், முழு மானியத்தில், 2,500 ஏக்கருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிட்டா, அடங்கல், ரேஷன், ஆதார் நகலுடன் புகைப்படத்துடன் சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி தோட்டக்கலை அலுவலர்களை, 97865 55569, 80982 85227 என்ற எண்களில் அணுகலாம் என, சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஷாலினி உதயா அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

