/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு புறவழிச்சாலை பணி மீண்டும் துவக்கம்; ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்
/
மேற்கு புறவழிச்சாலை பணி மீண்டும் துவக்கம்; ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்
மேற்கு புறவழிச்சாலை பணி மீண்டும் துவக்கம்; ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்
மேற்கு புறவழிச்சாலை பணி மீண்டும் துவக்கம்; ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்
ADDED : மார் 28, 2025 09:57 PM

பொள்ளாச்சி; நீண்ட இழுபறிக்கு பின், மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த, மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன் முத்துார், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில், ரோடு அமைக்கப்படுகிறது.
ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மொத்தம், 73.35 கோடி நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த, 2021ம் ஆண்டு திட்டப்பணிகள் துவங்கி, நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடந்தது. அதன்பின், பணிகள் மந்தமோ மந்தமாக நடைபெற்றது. இதற்காக, 171 மரங்கள் வெட்டப்பட்டன.
மேலும், மேற்கு புறவழிச்சாலை பணிக்காக, ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை, நான்கு கி.மீ., துாரத்துக்கு பழைய குழாய்களுக்கு மாற்றாக, ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து, மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர். இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து, பலமுறை விவசாயிகள், பொதுமக்கள் புகார் கொடுத்தும் பணிகள் துவங்க நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்தாண்டு மேற்கு புறவழிச்சாலை பணிக்காக கட்டடம் இடித்து அகற்றப்பட்டன.
ரோடு போடும் பணிகளை துவங்கினால், பயனாக இருக்கும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. வடக்கிப்பாளையம் பிரிவில் இருந்து, ஆர்.பொன்னாபுரம் செல்லும் ரோடு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் கூறுகையில், 'மேற்கு புறவழிச்சாலை பணி துவங்கப்படாததால், பல இன்னல்களை அனுபவித்தோம். தற்போது, பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் நிம்மதி அளிக்கிறது. ரோட்டை தரமாகவும், வேகமாகவும் முடித்து பயன்பாட்டுக்கு விட வேண்டும்,' என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் கூறுகையில், 'மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்தவருக்கு மாற்றாக, புதிய நபருக்கு ஒப்பந்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் எடுத்தவர் வாயிலாக, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.