/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே தகுதி, ஒரே பணிநிலை ஊதியத்தில் ஏன் பாரபட்சம்
/
ஒரே தகுதி, ஒரே பணிநிலை ஊதியத்தில் ஏன் பாரபட்சம்
ADDED : நவ 09, 2025 01:38 AM
கோவை: பள்ளிக் கல்வித்துறையில், 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்குள், ஊதிய முரண்பாடுகள் நிலவுவதாகவும், அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மாநில திட்ட இயக்ககம் முதல் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலகங்கள் வரை கணக்காளர்கள், கணினி விபர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் என பல்வேறு நிலைகளில் 1,428 பணியாளர்கள், முழுநேர தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில், ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணிநிலையில் உள்ள ஊழியர்கள், வெவ்வேறு விதமான தொகுப்பூதியம் பெறுகின்றனர்.
மாநில அரசின் மற்ற துறைகளில் இல்லாத இந்த ஊதிய முரண்பாடு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தில் மட்டும் நீடிப்பது, ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபு கூறியதாவது:
தொகுப்பூதிய பணியாளர்களில் சிலருக்கு குறைந்தபட்சம் ரூ.11,500 சம்பளமாகவும், சிலருக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையிலும் வழங்கப்படுகிறது. ஒரே தகுதி, ஒரே பணிக்கு இவ்வாறு வேறுபட்ட ஊதியம் வழங்குவது நியாயமற்றது. இவர்களில் பெரும்பாலானோர் பெண் பணியாளர்கள்.
இந்த முரண்பாடுகளை களைய கோரி, கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில திட்ட இயக்குநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

