பெங்களூரு, சென்னைக்கு ரயில் இயக்குவது... நிறைவேறுமா? ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தல்
பெங்களூரு, சென்னைக்கு ரயில் இயக்குவது... நிறைவேறுமா? ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 25, 2026 06:18 AM
ADDED : ஜூன் 24, 2026 07:30 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களும், புதிதாக பெங்களூரு, சென்னைக்கு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 14 கோடி ரூபாய் நிதியில் மறு சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்கா, அழகிய மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. முகப்பு பகுதி முழுமையாக புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிக்கப்பட்ட சூழலில், ரயில்கள் இயக்குவது குறித்த கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும் என ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
பெங்களூரு - கோவை உதய் டபுள் டெக்கர் ரயில், பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.
பொள்ளாச்சி - சென்னை எக்மோர் அல்லது தாம்பரத்துக்கு, பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக இரவு நேர தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி - பாலக்காடு மெமு ரயில் நேரத்தை காலை, 6:00 மணிக்கு மாற்றம் செய்தால், பலருக்கும் பயனாக இருக்கும். பொள்ளாச்சி - கோவை - மயிலாடுதுறை - கடலுார் தினசரி எக்ஸ்பிரஸ், பழநி, திண்டுக்கல், திருச்சி, திருச்செந்துார் வழியாக இயக்க வேண்டும்.
மதுரை - பொள்ளாச்சி - கோவை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில், மேட்டுப்பாளையம் - பாலக்காடு மெமு ரயில், கோவை, பொள்ளாச்சி, கொல்லங்ககோடு வழியாக இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி - கிணத்துக்கடவு கோவை ரயில் வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கோவை - திண்டுக்கல் விழா கால மெமு பயணியர் சிறப்பு ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
திருச்செந்துார் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பயணியர் வசதிக்காக கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். கிணத்துக்கடவில் ரயில் மேடையை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இது குறித்து, சமீபத்தில் பாலக்காட்டில் நடந்த, பாலக்காடு கோட்ட ரயில்வே பயனாளர் குழு கூட்டத்தில், பாலக்காடு கோட்ட ரயில் பயனாளர் குழு உறுப்பினர் ஆனந்தகுமார், கோரிக்கைகளை வலியுறுத்தினார். ரயில்வே நிர்வாகம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.
