/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரைபட அனுமதிக்கான கூடுதல் தொகையை மாநகராட்சி தருமா! விண்ணப்பதாரரிடம் திருப்பித்தர எதிர்பார்ப்பு
/
வரைபட அனுமதிக்கான கூடுதல் தொகையை மாநகராட்சி தருமா! விண்ணப்பதாரரிடம் திருப்பித்தர எதிர்பார்ப்பு
வரைபட அனுமதிக்கான கூடுதல் தொகையை மாநகராட்சி தருமா! விண்ணப்பதாரரிடம் திருப்பித்தர எதிர்பார்ப்பு
வரைபட அனுமதிக்கான கூடுதல் தொகையை மாநகராட்சி தருமா! விண்ணப்பதாரரிடம் திருப்பித்தர எதிர்பார்ப்பு
ADDED : செப் 19, 2024 11:13 PM

கோவை : கோவை மாநகராட்சியில், 3,500 சதுரடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு வரைபட அனுமதி வழங்க, தமிழக அரசின் உத்தரவை மீறி, கூடுதலாக வசூலித்த தொகையை, விண்ணப்பதாரர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சுய சான்றளிப்பு திட்டத்தில், 2,500 சதுரடி வரை பரப்பளவுள்ள மனையில், 3,500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் கட்டுவதற்கு இணைய வழியில் கட்டட வரைபட அனுமதி அளிக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சிக்கு சதுரடிக்கு, 88 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 44 ரூபாயாக இருந்தது. இரட்டிப்பு கட்டணம் நிர்ணயித்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதும், சில திருத்தங்கள் செய்து, ஒருங்கிணைந்த கட்டணம் நிர்ணயித்து, புதிய அரசாணை வெளியிட்டது.
அதில், சதுரடிக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்குள் ஆய்வு கட்டணம், கட்டட அனுமதி கட்டணம், அனுமதி காட்சி பலகை கட்டணம், தொழிலாளர் நல நிதி கட்டணம், உள்கட்டமைப்பு கட்டணம், கட்டட இடிபாடு அகற்றுதல் கட்டணம், உள்ளூர் திட்ட குழும கட்டணம், கட்டட அனுமதி வைப்புத்தொகை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
மேலும், 3,500 சதுரடி பரப்பளவு கொண்ட இரண்டு குடியிருப்புகளுக்கு மிகாமல், தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட, ஏழு மீட்டர் உயரத்துக்கு உட்பட்ட கட்டுமானம் என வரையறுத்துள்ளது.
ஆனால், தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு அனுப்பிய சுற்றறிக்கையில், 'அரசாணைக்குள் வராத இதர கட்டுமானங்களுக்கு, ஏற்கனவே அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைமுறையில் உள்ள கட்டணங்கள், அரசாணையில் நிர்ணயித்துள்ள கட்டணங்களுக்கு இணையாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்' என தெரிவித்திருக்கிறார்.
கமிஷனர் உத்தரவு
இதை அடிப்படையாக வைத்து, கோவை மாநகராட்சியில், 3,500 சதுரடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கும், வரைபட அனுமதி பெற சதுரடிக்கு ரூ.88 செலுத்த வேண்டுமென, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாமன்ற அனுமதி பெறாமல் நகரமைப்பு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தார். இது, கவுன்சிலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் நடந்த மாமன்ற கூட்டத்தில், தமிழக அரசின் உத்தரவும், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரின் சுற்றறிக்கையும் பதிவுக்கு வைக்கப்பட்டது.
அப்போது, 3,500 சதுரடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு கட்டணத்தை உயர்த்த கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்படுவதாக, மேயர் ரங்கநாயகி அறிவித்தார்.
அ.தி.மு.க., கடிதம்
இதுதொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கொடுத்த கடிதத்தில், 'அனைத்து குடியிருப்பு கட்டடங்களுக்கும் ஒருங்கிணைந்த கட்டணம் வசூலிக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்ததால், 22ம் எண்ணுள்ள அத்தீர்மானத்தை நிறுத்தி வைப்பதாக, மேயர் அறிவித்தார். ஆனால், செப்., 2 முதல், 3,500 சதுரடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கும் வரைபட அனுமதி பெற, 88 ரூபாய் வசூலிக்க, ஆக., 28ம் தேதி கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பிள்ளார். அதன்படி, செப்., 2 முதல், 13ம் தேதி வரை வசூலிக்கப்பட்டிருக்கிறது. தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், இந்நாட்களில் வசூலித்த தொகையை, விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.