ADDED : மே 29, 2026 03:03 AM

போத்தனுார்: கோவை, ஏ.ஜே.கே. கல்லுாரி, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், உலக கடல் பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, நவக்கரையிலுள்ள கல்லுாரி அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஏ.ஜே.கே. கல்வி குழும செயலர் அஜித்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''மறைந்த முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.லால் மோகன் கடல்வாழ் உயிரின ஆய்வில், குறிப்பாக கடல் பசு இந்தியாவில் குஜராத் பகுதியில் வாழ்கிறது எனும் உண்மையை, ஆய்வுலகிற்கு முறையாக எடுத்துக்காட்டிய முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர்.
''கடல் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பாதுகாப்பது மிகவும் அவசியம்,'' என்றார்.
சிறப்பு விருந்தினரான மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ரத்தீஷ்குமார், கடல்வாழ் உயிரினங்களின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். கடல் பசுக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. கட்டுரை, ஓவியம், வினாடி -- வினா, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.
பங்கேற்றவர்களுக்கு சான்றிதழும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஏ.ஜே.கே. புத்தாக்க வளர் மைய ஒருங்கிணைப்பாளர் பாரதி இளங்கோ வரவேற்றார். ஏ.ஜே.கே., நர்சிங் கல்லுாரி முதல்வர் பிருந்தா, ஆசிரியர்கள், மாணவர்கள், கடல் ஆர்வலர்கள் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.
