/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக மண் தினம் கொண்டாட்டம்; மரக்கன்றுகள் நடவு
/
உலக மண் தினம் கொண்டாட்டம்; மரக்கன்றுகள் நடவு
ADDED : டிச 06, 2024 11:11 PM

பொள்ளாச்சி; உலக மண் தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் வாயிலாக, பொள்ளாச்சி அருகே தேவனாம்பாளையத்தில் நான்காயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
ஈஷா யோகா மையத்தின் ஓர் அங்கமான, காவேரி கூக்குரல் இயக்கம், தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க, மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டு வருகிறது.
உலக மண் தினத்தை முன்னிட்டு, விவசாயிகளின் பங்களிப்போடு, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள, 51 விவசாய நிலங்களில், 364 ஏக்கர் பரப்பளவில், 95,260 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன்ஒருபகுதியாக, பொள்ளாச்சி அருகே உள்ள தேவனாம்பாளையத்தில், நான்காயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
காவேரி கூக்குரல் இயக்கத்தினர் கூறியதாவது:
தற்போதைய சூழலில், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், ஊட்டச்சத்து மற்றும் கரிம சத்துக்கள் அபாயகரமான அளவில் குறைந்து வருகிறது. விவசாய நிலங்களில் மண் வளத்தை மீட்டெடுக்க இயற்கை விவசாயம் மற்றும் மரம் சார்ந்த விவசாயம் ஒரு தீர்வாக உள்ளது.
விவசாய நிலத்தின் வேலியோரங்களில், 'டிம்பர்' மரங்களை நடுவது மண்வள பாதுகாப்பை உறுதிபடுத்தும். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற 'டிம்பர்' மரங்கள் நடுவதற்கு உகந்த மரங்களாகும்.
மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை ஈஷா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மண்ணில் பசுமை போர்வையும், நிழலும் நுண்ணுயிர்கள் நன்றாக வளர அவசியமாகும்.
பூமியில், 95 சதவீத உயிர்கள் மண்ணை நம்பி வாழ்கின்றன. கிட்டத்தட்ட, 60 சதவீத உயிரினங்கள் மண்ணுக்குள்ளே வாழ்கின்றன. தற்போதும், 54 சதவீத மக்கள் மண்ணை நம்பி தொழில் செய்கின்றனர். எனவே, மண்ணைக் காப்பது என்பதில், உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, நுண்ணுயிர்கள் பாதுகாப்பு என மூன்றையும் உள்ளடக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, 50 ஈஷா நர்சரிகள் வாயிலாக, தலா ஒரு 'டிம்பர்' மரக்கன்று 3 ரூபாய் என, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மரக்கன்றுகள் பெறுவதற்கு, 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினர்.