ADDED : ஜூன் 25, 2026 10:18 PM
மதிப்புக்கூட்டு தொழில்முனைவோர்களுக்கு... சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம் உதவி
பொள்ளாச்சி: ''மத்திய அரசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்து கிராமப்புற தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம்,'' என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு நிறுவன தலைவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களை மத்திய அரசின் சமூகவலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசின் என்.எஸ்.ஐ.சி., (நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்) மற்றும் தேசிய தென்னை நார் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு இலவச பயிற்சி வழங்கப்பட்டது.
அதில், தேங்காய் மதிப்பு கூட்டல், தென்னை நார் மதிப்பு கூட்டல், பால் மதிப்புக்கூட்டல், தேன் மதிப்பு கூட்டல், சேலை, வீட்டு உபயோக பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிப்போர் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்து தெரிந்து கொண்டனர்.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு நிறுவன தலைவர் கவுதமன் கூறியதாவது:
இந்திய பொருளாதாரத்தில், சமூக வலைதளங்கள் வாயிலாக விற்பனையாகும் பொருட்கள், மின்சாதனம் முதல் விவசாய உற்பத்தி பொருட்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த, 2024 - 25ம் ஆண்டு சமூகவலைதளங்கள் வாயிலாக, மொத்தம், 45 - 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.இன்று வர்த்தகம் சமூக வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுவதன் வாயிலாக, வாங்குவோருக்கு குறைந்த விலையில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், பொருட்களை ஆராய்ந்து பார்த்து வாங்க வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசின், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் வாயிலாக, 'TEAM' சமூகவலைதளம் வாயிலாக உற்பத்தியாளர்கள் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதில், மத்திய அரசின் என்.எஸ்.ஐ.சி., வாயிலாக உற்பத்தியாளர்கள் தங்களது நிறுவனங்களை, சமூக வலைதளத்தில் உள்ளீடு செய்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாய பொருட்கள் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களுக்கு இதற்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டது. அதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற உற்பத்தியாளர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து தெளிவுபடுத்திக் கொண்டனர்.
இப்பயிற்சி பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசின் சமூகவலைதளத்தில் பதிவு செய்து விற்பனை செய்ய கமிஷன் வழங்க வேண்டியதில்லை. சமூக வலைளதளம் வாயிலாக, 2030ம் ஆண்டில் விற்பனை அதிகரிக்கும். சிறு உற்பத்தியாளர்கள், தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியுமா என்ற கனவும் நினைவாகிறது. உலக வர்த்தக பாதைக்கு அழைத்து செல்ல இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
