/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பருவமற்ற காலத்திலும் மகசூல் கிடைக்க வேண்டும்': கருத்தரங்கில் துணை வேந்தர் வலியுறுத்தல்
/
'பருவமற்ற காலத்திலும் மகசூல் கிடைக்க வேண்டும்': கருத்தரங்கில் துணை வேந்தர் வலியுறுத்தல்
'பருவமற்ற காலத்திலும் மகசூல் கிடைக்க வேண்டும்': கருத்தரங்கில் துணை வேந்தர் வலியுறுத்தல்
'பருவமற்ற காலத்திலும் மகசூல் கிடைக்க வேண்டும்': கருத்தரங்கில் துணை வேந்தர் வலியுறுத்தல்
ADDED : நவ 14, 2024 11:20 PM

கோவை : “உரிய பருவத்தில் மட்டும் மகசூல் தரும் பயிர்களை, ஆண்டு முழுமைக்கும் அல்லது பருவமற்ற காலத்திலும் பலன் தரும் வகையில் உருவாக்குவது அவசியம்” என, கோவை வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி வலியுறுத்தினார்.
கோவை, வேளாண் பல்கலையில், தோட்டக்கலைத் துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தோட்டக்கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு சங்கம் (சோபோஸ்ட்) சார்பில், 'எதிர்காலத்துக்கான தோட்டக்கலை' சர்வதேச கருத்தரங்கு நேற்று துவங்கியது.
பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்துப் பேசியதாவது:
மிகக் குறுகிய காலத்தில் அதீத மழைப்பொழிவு, நீண்ட வறட்சிக் காலம் போன்ற பருவநிலை மாறுபாடுகள் தோட்டக்கலை பயிர்களுக்கு பெரும் சவாலாக உள்ளன. குளிர்காலம் குறைவாக இருப்பதால் ஆப்பிள் உள்ளிட்ட குளிர்காலப் பயிர்களின் பூக்கும் பருவம் தவறுகிறது.
குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் காய்த்த கத்தரிக்காய், இன்று ஆண்டு முழுதும் காய்க்கிறது. பெருமரமாக இருந்த மாமரத்தை, அளவான மரமாக மாற்றி, ஆண்டு முழுதும் காய், கனி கிடைக்கச் செய்திருக்கிறோம். 'மார்கழியிலும் மலரும் மல்லிகையை உருவாக்கியுள்ளோம்.
இதுபோன்று, உரிய பருவத்தில் மட்டும் மகசூல் தரும் பயிர்களை, ஆண்டு முழுமைக்கும் அல்லது பருவமற்ற காலத்திலும் பலன் தரும் வகையில் உருவாக்குவது அவசியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இரண்டு நாள் கருத்தரங்கில், நேபாளம், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நிபுணர்கள் பங்கேற்று ஆய்வுகளைச் சமர்ப்பிக்கின்றனர்.
துவக்க விழாவில், தோட்டக்கலை சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தோட்டக்கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு சங்கத்தின் இணைய பக்கம்துவக்கப்பட்டது.
தோட்டக்கலைத் துறை டீன் ஐரின் வேதமணி, தெலங்கானா, கொண்டா லட்சுமண் தோட்டக்கலை பல்கலை துணை வேந்தர் தண்டா ராஜி ரெட்டி, புனே, மலர்சாகுபடி இயக்குநரக இயக்குநர் பிரசாத், நபார்டு துணைப் பொதுமேலாளர் ஆனந்த், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.