ADDED : ஆக 20, 2025 10:12 PM
கோவை; வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், 23ம் தேதி காலை, 8:00 மணியளவில், ஈச்சனாரி ரத்தினம் கலை, அறிவியல் கல்லுாரியில் நடத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், உற்பத்தி துறை, ஜவுளி, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., ஆட்டோமொபைல்ஸ், விற்பனை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உட்பட முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்காக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என, அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம்.
முகாமுக்கு வரும் அனைத்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், தங்கள் சுய விபரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு, பணி நியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். இவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் பங்கேற்க, 270 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நர்சிங் துறையில், அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

