/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஷவண்டு கடித்து 5 பெண்கள் மயக்கம்
/
விஷவண்டு கடித்து 5 பெண்கள் மயக்கம்
ADDED : செப் 15, 2024 07:20 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருகே நுாறு நாள் வேலையின்போது விஷ வண்டுகள் கடித்ததில் 5 பெண்கள் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், மந்திப்பாளையம் ஓடையில் நேற்று காலை தூர்வாரும் பணி நடந்தது. 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதர்மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்தபோது 'கதண்டு' எனும் விஷ வண்டுகள் வெளியேறி பணியில் ஈடுபட்டவர்களை கடித்தன. இதில் மல்லிகா,65; கோதை,48; சுமதி,45; லதா,38; கலைவாணி,37; ஆகிய 5 பெண்கள் மயக்கமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.