ADDED : ஏப் 17, 2024 11:35 PM

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் அஸ்வந்த், 14, ஹரிஸ், 13, ஆகிய இருவரும், கடந்த 15ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன், மாதேஷ், 13, என்பவரை, அழைத்துக்கொண்டு, மூவரும் பைக்கில் பெருமாள் ஏரிக்கரை பகுதிக்கு சென்றனர். அஸ்வந்த் பைக்கை ஓட்டி சென்றார்.
பெருமாள் ஏரிக்கரையில் சென்றபோது, சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அஸ்வந்த், ஹரிஸ், மாதேஷ் மூவரும் பலத்த காயமடைந்தனர். உடன் அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அஸ்வந்த் உயிரிழந்தார். படுகாயமடைந்த , ஹரிஸ், மாதேஷ் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

