/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடம் கரையோர பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
/
கொள்ளிடம் கரையோர பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 02, 2024 01:53 AM

காட்டுமன்னார்கோவில்: கொள்ளிடம் ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் கீழணையில் இருந்து முட்டம் கிராமம் வரை கலெக்டர் ஆய்வு செய்தார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் வருகிறது.
இந்த தண்ணீர் அனைத்தும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக கொள்ளிட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கீழணையில் இருந்து முட்டம் கிராமம் வரை வருவாய், நீர்வள, நெடுஞ்சாலை, ஊரக உள்ளாட்சி ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
எய்யலுார் கிராமத்தில் பொதுமக்களிடம் கடந்த காலங்களில் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றபோது ஏற்பட்ட நிகழ்வுகளை கேட்டறிந்தார்.
கொள்ளிடம் ஆற்றில் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம், கடலுார் மாவட்டம் ஆதனுார் இடையே கட்டப்படும் கதவணையுடன் கூடிய பாலம் கட்டும் பணி பற்றி சிறப்பு திட்டம் செயற்பொறியாளர் பாலமுருகனிடம் கேட்டறிந்தார்.
ஓமாம்புலியூர் கிராமத்தில் கொள்ளிட படுகையில் தண்ணீர் சென்றால் ஏற்படும் விளைவுகள் பற்றி பொதுமக்களிடம் கேட்டார்.
ஆய்வின் போது சிதம்பரம் சப்கலெக்டர் ராஷ்மிகா ராணி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிறப்பு திட்ட செயற்பொறியாளர் பாலமுருகன், தாசில்தார் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சகதியா பர்வீன் நிஜார், வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் நெடுஞ்சாலை, வேளாண்மை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.