/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆபத்தான நிலையில் வணிக வளாகம்; புவனகிரியில் அதிகாரிகள் அலட்சியம்
/
ஆபத்தான நிலையில் வணிக வளாகம்; புவனகிரியில் அதிகாரிகள் அலட்சியம்
ஆபத்தான நிலையில் வணிக வளாகம்; புவனகிரியில் அதிகாரிகள் அலட்சியம்
ஆபத்தான நிலையில் வணிக வளாகம்; புவனகிரியில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜூன் 10, 2024 01:18 AM

புவனகிரி: புவனகிரியில், பழுதடைந்துள்ள பேரூராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாக கட்டடம், கலெக்டர் உத்தரவிட்டும் இடிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
புவனகிரி பேரூராட்சிக்கு சொந்தமான அண்ணா நாளங்காடி, புவனகிரி மீன் மார்க்கெட் அருகில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் உள்ளது. இதில் தரைதளம், முதல் தளம் என 20க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இக்கட்டடம் தற்போது பழுதடைந்து விரிசல் விட்டு மாடிபடி மேல் கம்பிகள் நீட்டிக் கொண்டுள்ளது. இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடத்தின் தன்மை குறித்து, கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையடுத்து, உதவி இயக்குனர் மூலம் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், பேரூராட்சி பொறியாளர் மூலம் அறிக்கை கேட்கப்பட்டது.
அதன்படி அரசு பொறியாளர்கள் ஆய்வு செய்து கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது,
இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். அதன் பேரில் கலெக்டர் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டார்.
ஆனாலும், வாடகைதாரர்கள் இடத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளும் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்காமல் உள்ளனர்.
இதனால் போக்குவரத்து நிறைந்த பகுதியில், இடிந்து விழும் ஆபத்தான நிலையிலேயே வணிக வளாகம் இருந்து வருகிறது.