ADDED : ஆக 02, 2024 01:44 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் முன், மா.கம்யூ.,- இந்திய கம்யூ., சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கடலுார் ஜவான் பவன் அருகில் இருந்து மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமையில், அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கூடினர்.
இதையறிந்த ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார் மற்றும் போலீசார் போராட்டத்திற்கு அனுமதியில்லை எனக்கூறினர். இதை தொடர்ந்து, ஜவான் பவனில் இருந்து கம்யூ., கட்சியினர் அண்ணா பாலம், பாரதி ரோடு வழியாக தடையை மீறி ஊர்வலமாக வந்தனர்.
தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் அருகில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு, போலீசாருக்கும், கம்யூ., கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தலைமை தபால் நிலைய நுழைவு வாயில் முன் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
பின், தபால் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டையும், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
நிர்வாகிகள் சுப்பராயன், ராஜேஷ் கண்ணன், அமர்நாத், பஞ்சாட்சரம், பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனால், கடலுார் - பண்ருட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 135 பேரை கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.