ADDED : ஜூலை 22, 2026 05:32 PM
ரூ. 2.58 லட்சத்தில் கட்டி வரும் கசடு கழிவு மேலாண்மை திட்ட பணிகள்... 6 ஆண்டுகளுக்கு பின் பயன்பாட்டிற்கு வருவதால் வரவேற்பு
பெண்ணாடம். ஜூலை 22–
பெண்ணாடம் பேரூராட்சியில், ரூ. 2.58 கோடியில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தில், ‘செப்டிக்’ டேங்க் கழிவுகளை உரமாக மாற்றும் திட்டம், 6 ஆண்டுகளுக்கு பிறகு செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சுற்றுப்புற துாய்மை, சுகாதார மேம்பாடு அடைவதால் பொது மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
மாநிலத்தில், திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதை முற்றிலும் தடுக்க, ‘துாய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், கிராமங்கள் தோறும் தனி நபர் கழிவறை அமைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் போலவே, கழிவறை ‘செப்டிக்’ டேங்கில் தேங்கும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் வகையில், கசடு கழிவு நீர் மேலாண்மை என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு துவக்கியது. அதன்படி, கடலுார் மாவட்டம், பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியில், இத்திட்டத்திற்கு, கடந்த 2020ல் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் ரூ. 2 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக வெள்ளாற்றங்கரையோரம் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதே ஆண்டில் பணிகள் துவங்கின.
இதில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய தலா, 10 தொட்டிகள் கட்டப்பட்டு, பெண்ணாடம் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டாரங்களில், கழிவுகள் எடுத்து வரப்பட்டு சேகரிக்கப்படும்.
முதல்நிலை தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளில், கசடு மட்டும் தங்கிவிடும். கழிவு நீர், புதைவடிகால் குழாய் மூலம், இரண்டாம் நிலை அமைப்பு தொட்டிக்கு செல்கிறது. இங்கு தேங்கும் கழிவு நீரை சுத்திகரிக்க, தொட்டியில் கூழாங்கற்கள் நிரப்பப்பட்டு, நாணல், கல்வாழை, வெட்டிவேர் உள்ளிட்ட இயற்கை சுத்திகரிப்பு செடிகள் வளர்க்கப்பட உள்ளன.
நீரில் உள்ள கழிவுகளை செடிகள் உறிஞ்சுவதால், அதன் தண்ணீரை, மோட்டார் மூலம் தோட்ட செடிகளுக்கு பாய்ச்சப்படும்.
தற்போது, கசடு கழிவு மேலாண்மை நிலைய திட்டப்பணிகள் நிறைவடைந்து, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் கூறியதாவது
கடலுார் மாவட்டத்தில், பெண்ணாடம் பேரூராட்சியில் தான், இத்திட்டம் முதன் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு குடிநீர் வடிகால் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம், கழிவு நீரை பாதுகாத்து பயன்படுத்துவது எப்படி என பயிற்சி அளிக்கப்படும்.
பேரூராட்சி குடியிருப்பு மற்றும் மற்ற கிராமங்களில் இருந்து, ‘செப்டிக்’ டேங்கில் கழிவுநீரை லாரியில் எடுத்து வர ஒரு லோடுக்கு, எவ்வளவு தொகை நிர்ணயம் செய்யவில்லை. தனியார் மூலம் கழிவுகளை அகற்ற விரும்பினால், அதற்கு தொகை வேறு.
தொழிற்சாலைகளின் கழிவு நீரை தவிர்த்து, மக்கள் குடியிருப்புகளில் இருந்து மட்டுமே, கழிவு நீர் எடுத்து வந்து சுத்திகரிப்பு செய்யப்படும்.
முதல் நிலை சுத்திகரிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள, 10 தொட்டிகளில் உள்ள கசடுகள் முற்றிலுமாக உலர, 20 நாட்கள் தேவைப்படும்.
தொட்டிகளில் சேகரமாகும் கசடுகள் நன்கு உலர்ந்து, வெடிப்பு, வெடிப்பாக வண்டல் மண் போல் காட்சி அளிக்கும்போது, அதை உரமாக சேகரிக்கப்படும்.
இதில், துர்நாற்றம், கிருமிகள் இருக்காது. இந்த கசடு கழிவுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பரிசோதனை செய்து, சோதனை முடிவில், இதை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்த சான்று அளிக்கப்படும். இந்த உலர்ந்த கசடுகளை, அனைத்து விதமான பயிர்களுக்கும் உரமாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
