என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : செப் 04, 2026 07:51 PM

மந்தாரக்குப்பம், செப். 5–
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி.,யில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வேண்டி இன்று 5ம் தேதி அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமையில் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் முன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக நில எடுப்பு டி.ஆர்.ஒ.,அழகர்சாமி தலைமையில் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., என்.எல்.சி., செயல் இயக்குநர் ஐாஸ்பர் ரோஸ், துணை கலெக்டர் சண்முகவல்லி, டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை 30 முதல் 45 நாட்களுக்குள் மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக என்.எல்.சி., அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதனையேற்று இன்று நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டத்தை விலக்கி கொள்வதாக கூறி கலைந்து சென்றனர்.
