ADDED : ஜூலை 02, 2024 05:37 AM
விருத்தாசலம்: முந்திரி கொள்முதல் செய்த பணத்தை பெற்றுத்தரக்கோரி, விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட முந்திரி விவசாயிகளிடம், அதே பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இருவர், ரூ.15 லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டைகளை கடந்தாண்டு கொள்முதல் செய்துள்ளனர். இதுநாள்வரை பணம் தரவில்லை என, கூறப்படுகிறது.
இதுசம்பந்தமாக, மாவட்ட பொருளாதார குற்ற பிரிவில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதில், ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில்,விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க மாநில அமைப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் குமரன் மற்றும் ராமர், ராஜசேகரன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பாலக்கரையில் இருந்து ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூதிடம் கோரிக்கை மனு அளித்தனர்.