ADDED : ஆக 22, 2024 02:04 AM
பெண்ணாடம் : பெரம்பலுார் மாவட்டம், ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை,60; இவர், நேற்று முன்தினம் தனது இளைய மகள் தேவியை, திருச்சி பெரியார் அரசு கல்லுாரியில் எம்.எஸ்சி., வேதியியல் பாடப்பிரிவில் சேர்க்க மூத்த மகள் பழனியம்மாளுடன் திருச்சிக்கு சென்றார்.
அங்கு மகளை கல்லுாரியில் சேர்த்த பின் அன்று மாலை மூவரும் திருச்சி-விழுப்புரம் பாசஞ்சர் ரயிலில் இரவு 9:00 மணிக்கு செந்துறைக்கு வந்தனர்.
அங்கிருந்து இரவு 9:15 மணிக்கு சொந்த ஊர் செல்ல, தேவி ரயில் பாதையை கடந்தார். அவரை தொடர்ந்து வந்த பிச்சைப்பிள்ளை, பழனியம்மாள் ஆகியோர் ரயில் பாதையை கடக்க முயன்றபோது நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரி சென்ற திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இளைய மகளை கல்லுாரியில் சேர்த்து விட்டு வந்த தந்தை, மகள் ரயிலில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.