ADDED : மே 10, 2024 01:17 AM

சிதம்பரம்: சிதம்பரம் - புவனகிரி சாலையில் உள்ள, சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகத்தில், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா முன்னிலையில், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி ஆய்வு செய்தார்.
சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளை சேர்ந்த, 59 தனியார் பள்ளிகளின் 222 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
வாகனங்களின் அமைப்பு, படிக்கட்டுகள், ஜன்னல்கள், அவசர வழி உள்ளிட்ட வசதிகள், தீயணைப்பு கருவி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.ஆர்.எஸ்., இணைப்பு, முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், பிரதிபலிப்பான் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தனர். இதில், 7 வாகனங்கள் சிறு சிறு குறைபாடுகள் காரணமாக, நிராகரிக்கப்பட்டன.
தொடர்ந்து சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பிரபாகரன், தீ தடுப்பு வழிமுறைகள், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்தும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தில் காயமுற்றவர்களை காப்பாற்றுவது குறித்தும் செயல் விளக்கமளித்தனர்.
சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் விநாயகம், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், சரஸ்வதி வித்யாலா பள்ளி தாளாளர் சரவணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.