/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரு வீடுகளில் நகை, ரொக்கம் திருட்டு
/
இரு வீடுகளில் நகை, ரொக்கம் திருட்டு
ADDED : மே 31, 2024 02:55 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் நுழைந்து, நகை, ரொக்கத்தை திருடிச் சென்றதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் முத்துக்குமாரசாமி, 34. இவர், வெயிலின் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு, மனைவி குழந்தைகளுடன் மொட்டை மாடியில் துாங்கினார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவுகள் திறந்திருந்தன.
அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. அதில், குழந்தைகளின் பள்ளி கல்விக்கட்டணத்திற்காக வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் திருடுபோயிருந்தது தெரிந்தது.
அதுபோல், இவரது வீட்டின் எதிரே உள்ள சித்தப்பா மாசிலாமணி வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் யாரும் இல்லாதது தெரிந்து, பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் ஐய்யனார் உள்ளிட்ட போலீசார் சென்று விசாரித்தனர்.
தடயவியல் நிபுணர்கள் மர்ம நபர்களின் கைரேகை தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் கூப்பர், விருத்தாசலம் - சேலம் ரயில் பாதையோரம் வரை ஓடிச்சென்று நின்றது. இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இரு வீடுகளில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இரு வீடுகளில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம், விருத்தாசலத்தை சுற்றியுள்ள கிராம மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.