என்.எல்.சி., துணை நிறுவனம் பங்கு வெளியீட்டு மேலாளர்கள் நியமனம்
என்.எல்.சி., துணை நிறுவனம் பங்கு வெளியீட்டு மேலாளர்கள் நியமனம்
ADDED : ஜூலை 17, 2026 08:41 PM
நெய்வேலி ஜூலை 18–: என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.ஐ.ஆர்.எல்,, பொதுப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்க, பங்கு வெளியீட்டு மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின், முழுமையான துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் தனது முன்மொழியப்பட்ட பொதுப் பங்கு வெளியீட்டிற்காக நான்கு முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனங்களை பங்கு வெளியீட்டு முன்னணி மேலாளர்களாக நியமித்துள்ளது.
இது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பதுடன், 2030 ம் ஆண்டிற்குள் 500 ஜிகா வாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி திறனை அடைவதற்கான நாட்டின் இலக்கிற்கும் பங்களிக்கும்.
பங்கு வெளியீட்டு முன்னணி மேலாளர்கள், நிறுவனத்திற்குப் பொதுப் பங்கு வெளியீட்டைத் தயாரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குவார்கள்.
என்.எல்.சி., இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட், நவரத்னா அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாகும்.
கடந்த 2023 ம் ஆண்டு, ஜூன் 14,ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிறுவனம், நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தில் ஒரு முக்கிய உந்துசக்தியாகத் திகழ்கிறது.
இந்த நிறுவனம் சூரிய ஆற்றல், காற்றாலை, பேட்டரி எரிசக்தி சேமிப்பு மற்றும் மேற்கூரை சூரிய ஆற்றல் ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக 1,785 மெகாவாட் நிறுவுதிறனைக் கொண்டுள்ளது. இதன் செயல்பாட்டு திட்டங்கள் தமிழகம், ராஜஸ்தான் மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் எதிர்கால எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை உருவாக்குதல், மின் உற்பத்தி செய்தல், அவற்றை இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம், தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், அசாம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தனது செயல்பாடுகளைத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.
