ADDED : ஜூலை 22, 2026 04:51 PM
புவனகிரி: புவனகிரி பேரூராட்சியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு எப்போது என கேள்வி எழுந்துள்ளது.
புவனகிரி பேரூராட்சி, ஆதிவராக நத்தம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் உவர்ப்பு தன்மையாக மாறியதால் அப்பகுதியினர் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் நீடித்தது.
பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், துாய்மையான குடிநீர் வழங்க கடந்த, 2022–2023 ஆம் நிதி ஆண்டில்,
பேரூராட்சி பொது நிதி ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கிட குழாய் பதிக்கும் பணிக்கு, கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்., 2 ம் தேதி டெண்டர் விடப்பட்டது.
குழாய் பதிக்கும் பணி, தனி நபர் ஆக்கிரமிப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அப்போதைய சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வருவாய்த்துறையின் மூலம் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க புவனகிரி தாசில்தார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். மீண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்த நிலையில், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் கூடுதல் பொறுப்பில் இருந்த செயல் அலுவலர்கள் இதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர்.
இதனால் அப்பகுதி மக்கள் தற்போது வரை பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் நீடிக்கிறது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
