ADDED : ஆக 02, 2026 04:31 PM
குள்ளஞ்சாவடியை பேரூராட்சியாக தரம் உயர்த்த... பஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியை பேரூராட்சியாக தரம் உயர்த்தி, புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
கடலுார் - விருத்தாச்சலம் பிரதான சாலையில் குள்ளஞ்சாவடி சந்திப்பு முக்கிய பகுதியாகும். இப்பகுதியை சுற்றி, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து கடலுார் , புதுச்சேரி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பொதுமக்கள் தினசரி தங்கள் வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், இங்கிருந்து மற்ற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், கடலுார் , குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள அரசு தனியார் மருத்துவமனைகள், அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் என, ஏராளமானோர் தங்கள் படிப்பு மற்றும் அன்றாட அலுவல்களுக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களது கிராமங்களில் இருந்து சொந்த வாகனங்கள் மூலம் குள்ளஞ்சாவடி சந்திப்பு வந்து, அங்குள்ள கடைகளின் முன் வாகனங்களை விட்டுவிட்டு, பஸ் போக்குவரத்தை நம்பியே தினசரி செல்கின்றனர்.
இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் குள்ளஞ்சாவடி சந்திப்பில் நிறுத்தி, பயணிகள் இறங்கி, ஏறி செல்கின்றனர். அதிக அளவு கிராமப் பகுதிகளை கொண்டுள்ள குள்ளஞ்சாவடியில் இதுவரை பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்களுக்கு காத்திருக்கும் பொதுமக்கள் இங்குள்ள நிழற்குடைகளில் காத்திருந்து, பஸ் பிடித்து செல்லும் நிலையே இருந்து வருகிறது. அவ்வாறு காத்திருக்கும் நேரங்களில் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிப்பதில் தொடங்கி, தண்ணீர், டீ, காபி, சிற்றுண்டி வாங்குவது, இளைப்பாறுவது என அனைத்து வசதிகளுக்கும் சிரமப்படுகின்றனர்.
இந்த தேவைகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு செல்லும் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய பஸ்களை தவற விடுகின்றனர். இதனால் குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லுாரி , அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். மேலும், முதியோர், குழந்தைகளுடன் செல்லும் பெண்கள், கர்ப்பிணிகள் என, அனைத்து தரப்பினரும் பஸ் நிலையம் இல்லாமல் அவதியடைகின்றனர்.
பஸ் நிலைய வசதி இல்லாததால் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் நிறுத்த இடம் இல்லாமல், கடலுார் - விருத்தாச்சலம் சாலை, ஆலப்பாக்கம் சாலை, சத்திரம் சாலையில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பயணிகள் இல்லாமல் காலியாக இயக்கப்படுகின்றன. இவ்வாறு குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து தினசரி செல்லும் பஸ் பயணிகள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் என, அனைத்து தரப்பினரும் பஸ் நிலையம் இல்லாமல் நீண்ட நாட்களாக தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
இப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்கும் அளவிற்கு உள்ள அரசு மற்றும், பொது இடங்களும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பின் பிடியில் சுருங்கி வருகிறது. குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி ஊராட்சி நிர்வாகங்கள் இணைந்து குள்ளஞ்சாவடிக்கு என தனி பஸ் நிலையம் அமைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
குள்ளஞ்சாவடி பகுதியை அம்பலவாணன்பேட்டை, வழுதலம்பட்டு, அகரம், ஆயிக்குப்பம் பகுதிகளை இணைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்தினால் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என, இப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். குள்ளஞ்சாவடிக்கு என தனி பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
