ADDED : ஆக 13, 2024 05:40 AM

கடலுார்: மாவட்டத்தில் நலிவுற்ற விஸ்வகர்மா சமூகத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என ஐந்தொழில் விஸ்வகர்மா நலச் சங்கத்தினர், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைக்கேட்புக் கூட்டத்தில், மாவட்ட ஐந்தொழில் விஸ்வகர்மா நலச் சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் ஜெயகணேசன், பொருளாளர் சக்திவேல், சேகர், ரமேஷ் ஆகியோர் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமாரிடம் இதுகுறித்து மனு அளித்தனர்.
அதில், மாவட்டத்தில் ஐந்தொழில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த 63 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விஸ்வகர்மா சமூகத்தினரின் ஆயத்த தயாரிப்பு தொழில்கள் தவிர்க்கப்படுகிறது. இதனால் எங்கள் பாரம்பரியத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நலிவுற்று, குடியிருக்க வீடு இல்லாமல் உள்ளனர். அதனால் நலிவுற்ற விஸ்வகர்மா சமூகத்தினருக்கு இவவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
தொழில் உபகரணங்கள் வழங்க வேண்டும். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

