ADDED : மே 08, 2026 10:03 PM
மந்தாரக்குப்பம்: ஊராட்சிகளில் உரம் தயாரிப்பை ஊக்குவிக்க சுற்றச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளில் துாய்மையை மேம்படுத்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் துாய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் பின் அக்கழிவுகளிலிருந்து, உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பணிகள் ஊராட்சிகளில் துவக்கத்தில் மட்டுமே தீவிரமாக செயல்பட்டு வந்தது.
குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து உரக்குழிகளில் கொட்டி குப்பை கழிவுகளிலிருந்து உரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள தேவையான வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் தற்போது உரம் தயாரிக்கும் பணிகள் முழுமையாக நடப்பதில்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கழிவுகள் வாயிலாக உரம் தயாரிப்பது மற்றும் மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்து ஊராட்சிகளில் பயன்படுத்துவதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
