/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதாள சாக்கடை திட்டம்; பேரூராட்சி மக்கள் கோரிக்கை
/
பாதாள சாக்கடை திட்டம்; பேரூராட்சி மக்கள் கோரிக்கை
ADDED : மே 08, 2024 11:48 PM
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும் என, பேரூராட்சி வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு சாதாரண மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவு உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சியின் எல்லைகளும், குடியிருப்புகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
ஆனால் வார்டுகளில் உள்ள வடிகால் வாய்க்கால் வசதி போதுமானதாக இல்லை.
இதனால் மழை காலங்களில் தாழ்வான பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி, சாலைகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
பல வார்டு பகுதிகளில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை காலங்களில் சாலைகள், தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடும் அவலம் தொடர்கிறது.
எனவே, பெண்ணாடம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம், பேரூராட்சிகளின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.