/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதக்கங்களை குவித்த கடலுார் கல்லுாரி மாணவர்கள்
/
பதக்கங்களை குவித்த கடலுார் கல்லுாரி மாணவர்கள்
ADDED : ஆக 01, 2024 06:43 AM

கடலுார்: கடலுார் அரசு கல்லுாரி மாணவ, மாணவிகள், தென்னிந்திய மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அசத்தி வருகின்றனர். கடந்த 2017 ம் ஆண்டு முதல் இப்போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பல பதக்கங்களை பெற்ற மாணவ மாணவியர், விளையாட்டு ஒதுக்கீட்டில் பல்வேறு பணிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு வரையில், 20க்கும் மேற்பட்டோர் காவல் துறையில் சேர்ந்தனர்.
2021ம் ஆண்டு இக்கல்லுாரியில் பெண்கள் ஹாக்கி அணி துவக்கப்பட்டது. இதில் 5 பேர் பல்கலைக்கழக அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். 2022ல் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடந்த பென்காக் சிலாட் போட்டியில் லோகேஸ்வரன், சுதர்சன் வெண்கலம் பெற்றனர்.
2023ம் ஆண்டு நடந்த போட்டிகளில் 39 பேர் தென்னிந்திய மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் பல்கலைக்கழக விளையாட்டுச் சான்றிதழ் பெற்றனர்.
இவர்களில் பஞ்சாப்பில் நடந்த அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான பென்காக் சிலாட் போட்டியில் இரண்டாமாண்டு மாணவர்கள் போஸ் ராஜகுரு 2 வெள்ளி பதக்கம், ஸ்ரீகாந்த், கடந்தாண்டு மாணவர்கள் லோகேஸ்வரன், சுதர்சன் தலா 1 வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இதன் மூலமாக அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டியில் முதல் முறையாக இக்கல்லுாரி 5 வெள்ளி பதக்கங்களை பெற்றது.
மேலும், இரண்டாமாண்டு மாணவி சுமித்ரா அசாமில் நடந்த கேலோ இந்தியா பல்கலைக் கழக மல்லர் கம்பம் போட்டியில் இக்கல்லுாரியில் இருந்து முதன் முறையாக பங்கேற்றார்.
2023ம் ஆண்டு போஸ் ராஜகுரு, கோவாவில் நடந்த 37வது தேசிய விளையாட்டு போட்டியில் பென்காக் சிலாட் போட்டியில் வெள்ளி வென்று அசத்தினார். மாணவர் ஆகாஷ், தென்னிந்திய பல்கலைக்கழக டேக்வாண்டோ போட்டியில் வெண்கலம் வென்றார்.
2023ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக அளவில் மல்யுத்த போட்டி, ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க போட்டியிலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. உடற்கல்வி இயக்குனர்கள் குமணன், மாரிமுத்து ஆகியோர் விளையாட்டு பயிற்சி அளிக்கின்றனர்.