ADDED : ஆக 02, 2024 01:37 AM

கடலுார்: பரங்கிப்பேட்டை அடுத்த முடசல்ஓடை துறைமுகத்தில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் இழுவலைகளில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்துவது மற்றும் மீன்களுக்கு உரிய உலகளாவிய சந்தையை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது.
இந்திய கடல்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், நெட்பிஷ் மற்றும் கடலுார் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை அமைப்பு சார்பில், நடந்த முகாமில், முடசல் ஓடை பகுதி விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வராசு, கிராமத் தலைவர் நல்லரயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கடலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ரம்யாலட்சுமி தலைமை தாங்கி, கடல் சூழலில் ஆமைகளின் முக்கியத்துவம் குறித்தும் ஆமைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பேசினார்.
நெட்பிஷ் மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்மூர்த்தி, ஆமை விடுவிப்பு சாதனத்தின் முக்கியத்துவம், பயன்பாடு முறைகள், சாதனம் பொருத்தும் விதம், இயங்கும் முறைகள் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கினார். கடலுார் மீன்வளத்துறை ஆய்வாளர் ரஞ்சித்குமார், மீன்வளத்துறை அலுவலர்கள் ராமன், ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.