ADDED : ஆக 06, 2024 07:08 AM

பெண்ணாடம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், கிடப்பில் போடப்பட்ட சுமைதாங்கி - வெண்கரும்பூர் தார்சாலை பணி துவங்கியது.
பெண்ணாடம், சுமைதாங்கி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரியராவி, ஓ.கீரனுார், பெ.பூவனுார் வழியாக வெண்கரும்பூர் செல்லும் தார் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேலும், இப்பகுதி கிராம மக்களும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு செல்கின்றனர். இச்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதி அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. ஆனால் சாலை பணி இதுவரை துவங்கவில்லை. இதனை சுட்டிக்காட்டி, கடந்த மாதம் 18ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை தார் சாலை அமைக்க முதற்கட்ட பணிகள் பொக்லைன் மூலம் துவங்கியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.