ADDED : மே 05, 2026 05:41 PM
கடலுார்: தமிழகத்தில், 100க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்த த.வெ.க., கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெறும் 2 சீட்டுகள் மட்டுமே பெற்றிருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இந்நிலையில், துவக்கம் முதலே விஜய்யின் த.வெ.க., முன்னணியில் இருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் கிடைக்காத நிலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து அதிக இடங்களை பெற்ற கட்சியாக உருவெடுத்தது.
ஆனால், விஜய்க்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளதாக கருதப்படும், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், 20 தொகுதிகளில் கடலுார், கள்ளக்குறிச்சி ஆகிய, 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் அமைச்சர் கணேசனின் தொகுதியான திட்டக்குடியில் த.வெ.க.வின் தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகர், 2ஆயிரத்து 629 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை நழுவ விட்டார்.
தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில், த.வெ.க.,மாவட்டசெயலாளர் விஜய் 2ஆயிரத்து 387 ஓட்டு வித்தியாத்தில் வெற்றியை நழுவ விட்டார். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் தொகுதியிலும் த.வெ.க.,வெற்றிக்காக கடுமையாக போராடியது.
பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட இப்பகுதியில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளாதது அக்கட்சி வேட்பாளர்களுக்கு பின்னடைவாக அமைந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடலுாரில், 3 முறை விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டும் புதுச்சேரி தேர்தல், ரோட் ஷோவிற்கு அனுமதி கிடைக்காதது போன்ற காரணங்களால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் மற்ற கட்சி வேட்பாளர்களை விட த.வெ.க., வேட்பாளர்களுக்கு பிரசாரம் சிறப்பாக அமையவில்லை. பிரசாரம் சிறப்பாக அமைந்திருந்தால், மேலும் சில தொகுதிகள் கிடைத்திருக்கலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.
