ADDED : மே 07, 2026 06:22 PM
புதுச்சத்திரம்: ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார், மணிக்கொல்லை, பால்வாத்துண்ணான், அலமேல்மங்காபுரம், வேளங்கிப்பட்டு, அத்தியாநல்லூர், பெரியப்பட்டு சாமியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விழுப்புரம்– நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தின்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.
இதனால் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், சிகிச்சைக்கு சென்று வரும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
