/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் வரலாற்று பொக்கிஷம் பாதுகாக்கப்படுமா
/
விருதையில் வரலாற்று பொக்கிஷம் பாதுகாக்கப்படுமா
ADDED : செப் 04, 2024 06:59 AM

விருத்தாசலத்தில் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்களை உருவாக்கிய பெருமை கொண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுற்றுபுற கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியும் இங்கு செயல்பட்டு, இட நெருக்கடியால் புதிய கட்டடம் கட்டப்பட்டு, மாற்றப்பட்டது.
பள்ளியில் 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படாமல், பள்ளி வளாகத்தில் இருந்த பெரும்பாலன பழைய வகுப்பறை கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன.
ஆனால், பள்ளி நுழைவு வாயில் முன்பு உள்ள ஆங்கிலேயர் காலத்து கட்டடம் இன்றும், தனது கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த கட்டடத்தில், தற்போது தலைமையாசிரியர் அறை, நுாலகம், ஆவணங்களை பாதுகாக்கும் அறைகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கட்டடம் கட்டி 90 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், கட்டடம் பராமரிப்பின்றி உள்ளதால், கட்டத்தின் மேல் உள்ள ஓடுகள் ஆங்காங்கே உடைந்து சேதமடைந்துள்ளன. மேலும், தரைதளம், கட்டட சுவர்களில் காரைகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
இதனால், மழைக்காலங்களில் நுாலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரிய வகை புத்தகங்கள், மற்றும் ஆவணங்கள்நனைந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் நிதி திரட்டி, கலையரங்கம்,நுாற்றாண்டு நினைவு ஆர்ச் அமைத்துள்ளனர். அதேபோல், சிதிலமடைந்து வரும் ஆங்கிலேயர் காலத்து வரலாற்று பொக்கிஷமாக உள்ள கட்டடத்தை பழமை மாறாமல் சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.